263. தேவாசனப்பதியும் சேனைத்

தேவாசனப்பதி

1. தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத்
தேவர் குலமாய் வாரதாரையா? இவர்
தேவ னுரைப்படி,
பாவ வினைப்படி,
ஏவை மனப்படி,
ஆவல் மிகப்படி;
வணங்குங் ஜெகஜோதிப் பொருள் தானையா. - இவர்

2. முன்னணி பின்னணியி லோசன்னா! ஓசன்னா வென
ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்
உத்தம நேசனாம்,
சத்திய போசனாம்,
பக்தரின் வாசனாம்;
நித்திய ஈசனாம்;
உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா. - இவர்

3. பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்
பாவலருடன் வாரதாரையா? இவர்
பசியற்றிருந்தவர்,
பொசிப்பற்றிருந்தவர்,
வசை பெற்றிருந்தவர்,
அசைவற்றிருந்தவர்;
பாவ விமோசன ராசன் தானையா. - இவர்

4. சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்
சிங்காரமாய் வாருவதாரையா? இவர்
சீருற்றதிபனாம்,
பேர் பெற்றிறைவனாம்,
பாருற்றதிபனாம்,
வேருற்றெழுந்தனாம்;
சீவ வழி சொல்வரிவர் தானையா. - இவர்

5. எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே
குருத்தோலை வீச வாரதாரையா? இவர்
அரிவை பவமற,
பெருமை நிதந்தர,
கிருபை துரந்தர,
அருமை நிரந்தர,
ஏசு கிறிஸ்திறைவர் தானையா. - இவர்

6. வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப
வஸ்திரமீதில் வாருவதாரையா? இவர்
வல்லவராங் குரு,
சொல் தவறாக் குரு,
நல்லவராங் குரு,
துல்லிய சற் குரு,
வரமிகுந்த சற்குரு தானையா. - இவர்


ராகம்: காம்போதி
தாளம்: ஆதி தாளம்
ஆசிரியர்:  மு. தேவசகாயம்