289. நீயே நிலை உனதருள் புரிவாயே

நீயே நிலை

பல்லவி

நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு

சரணங்கள்

1. தூய அர்ச்சயர்கள் சூழ சீயோன் மாமலையில் ஆளும்
சுந்தரக் கிருபை வாரியே மைந்தர் கட்கனுசாரியே,
சோபன ஜீவி-மகிமைப்ர,-தாப அரூபி, சொரூபி,
ஜோதி, ஆதி நீதி ஓதி சுயவல்லமையில் நரர் திரு உரு என வந்த - நீயே

2. நன்மை நிறை வாகரமே,[1] ஞானப் பிரபாகரமே,
வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே,
மகிமை வந்தனமே,-அடியார்-துதிகள் தந்தனமே, கனமே,
வாச நெச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை[2] துதி - நீயே

3. வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த,
ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த,
நய கிருபாலி,-உலகின்-பவம் அறு மூலி, செங்கோலி,
நாடி, நீடி, தேடி, கூடி, நயம் அருள் அரசன் நீ, தயவுடன் பரிசனி.[3] - நீயே


ராகம்: காம்போதி
தாளம்: ஆதிதாளம்
ஆசிரியர்: வே. சாஸ்திரியார்

[1] உறைவிடமே
[2] பூசனை
[3] சேர்த்துக்கொள்